பிரபாகரன் கைதான அன்று என்ன நடந்தது?

பிரபாகரன் கைதான அன்று என்ன நடந்தது?
https://www.thaaii.com/?p=39931
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்-2
தமிழக ஊடகங்களில் அன்று, அந்தச் சம்பவம் பரபரப்புச் செய்தி…
பிரபாகரன், முகுந்தன் உள்ளிட்ட பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவம் 19-05-1982 அன்று நடந்தது.
கடந்த 19.05.1982 அன்று ‘தொட்டால் சுடும்’ என்ற திரைப்படத்தைத் தி.நகர் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்து விட்டு, அங்குள்ள செலக்ட் ஓட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு, பாண்டி பஜாரில் நடந்துச் செல்லும் போது கீதா கபே முகுந்தனும் பிரபாகரனும் இரவு 9.30 மணியளவில் சுட்டுக் கொண்டபோது ஏற்பட்ட சத்தத்தில் பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓடி வந்தார்கள்.
கரிகாலன் என்ற பிரபாகரன், ரவீந்திரன் மற்றவர்களையும் பிடித்து பாண்டி பஜாரில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தப்பித்து ஓடி விட்டார். அவரை இரண்டு நாட்கள் கழித்து கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.
அப்போது அந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியைக் கையகப்படுத்தினார். ஜோதீஸ்வரன் என்ற கண்ணனும் கைது செய்யப்பட்டார்.
அங்கு தலைமைக் காவலர் எஸ்.ரெங்கசாமி (எண்:HC 3425) இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார். இதெல்லாம் நினைவுகள்.
இந்த வழக்கில் பலருடைய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. முக்கியமாக பழ.நெடுமாறன், பிரபாகரன், எனது வாக்குமூலம், முகுந்தன் வாக்குமூலம், இரவீந்திரன் வாக்குமூலம், ஜோதீஸ்வரன் வாக்குமூலம் மற்றும் தெருவில் நடந்துச் சென்ற சிலரின் வாக்குமூலம் மட்டுமே காவல் துறையால் பெறப்பட்டன.
20, 21 – 05-1982 ஆகிய இரு நாட்கள் காவல்துறை மந்தைவெளி Admiralty hotel இல் விசாரணை நடைபெற்றது. பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி கண்காணிப்பாளர் வெள்ளியங்கிரி தலைமையில் புலன் விசாரணை நடந்தது.
அதற்கு அடுத்த நாள் நானும் பிராபாகரன் தங்கியிருந்த சாலைத்தெரு வீட்டிலும் 22-05-1982 அன்று டி.ஐ.ஜி மோகன்தாஸ் தலைமையில் ரெய்டு நடத்தப்பட்டது. நான் வழக்கு நடத்தும் ஆவணங்களையும் எனது உடமைகளையும் மற்றும் பிரபாகரனின் ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.
பிரபாகரனை 23-05-1982 அன்று சென்னை மத்திய சிறையில் சந்தித்தேன். அடுத்த நாள் நெடுமாறன் அவர்களுடன் சென்று சந்தித்தேன். 24-07-1982 அன்று வை.கோ அவர்களை அழைத்துச் சென்று பிரபகரனைச் சந்தித்தேன்.
05-08-1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை ஆணை கோரி மனுவைத் தாக்கல் செய்தேன்.
அடுத்தநாள் 06-08-1982 நிபந்தனையின் பேரின் பிணை ஆணை கிடைக்கப் பெற்றேன். மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமலையும், நானும் ஆஜர் ஆனோம்.
என்ன நிபந்தனைகள்?
நிபந்தனையின் படி பிரபாகரன் மதுரையிலும், முகுந்தன் சென்னையிலும் தங்கி காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகள்.
நெடுமாறன், பிரபாகரனை 07-08-1982 அன்று அழைத்துக் கொண்டு மதுரை சென்றார். மதுரை, மேலமாசி வீதி, விவேகானந்தா அச்சகத்திற்கு எதிரே உள்ள தனது பழைய வீட்டில் தங்க வைத்தார்.
அந்த வீட்டிற்கு அருகில் தான் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி காசிம் வீடும் இருந்தது. இவை யாவும் தமிழீழ அரசியல் புரிதல் உள்ள பலருக்கும் தெரியும்.
அதற்குப் பாடுப்பட்ட நெடுமாறன் மற்றும் வைகோ, மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, எனது ஜூனியரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே.எம்.பாஷா, எனது சீனியர் மாநில வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.காந்தி ஆகியோர் அதற்கான சாட்சிகளாக இப்போதும் இருக்கின்றார்கள்.
உயிருடன் இல்லாதவர்களை சாட்சியாகக் குறிப்பிட விரும்பவில்லை. பாண்டிபஜார் காவல் நிலையத்தின் அன்றைய மூத்த காவலர் எஸ்.ரங்கசாமி (HC3425) ஆகியோரிடம் வழக்கின் போக்கை கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம்.
இன்றைக்கும் இந்த ஆவணங்களை வழக்கு மன்றத்தில் பார்க்கலாம். SC No.8/1983 on the file of 7th Additional Court, High Court வளாகத்தில் பார்க்கலாம்.
வரலாறுகளைத் திரித்துச் சொல்வதால் சிலருக்கு என்ன இலாபம் என நான் அறியேன். அதே சமயத்தில் உண்மையை வெளிக்காட்ட வேண்டிய நிலையும், வரலாறு திரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்ற காரணத்தால் இதனை எல்லாம் பதிவு செய்கின்றேன்.
இதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டோர் வந்து பார்த்துக் கொள்ளலாம்.
இது தான் நடந்தது. இது தான் உண்மை. வரலாறு. இதற்கு மேலும் மாற்றிப் பேசினால் என்ன சொல்ல முடியும். இது குறித்தான ஆவணங்களோடு என்னுடைய ‘நினைவுகள், சுவடுகள் என்ற நூலில் விரைவில் வெளிவர இருக்கின்றது. அவ்வளவுதான்.
இது குறித்த பழைய எனது பதிவுகள்:
யார்மீதும் உள்ள மரியாதையை குறைக்கவோ, காயப்படுத்தவோ இப்பதிவை நான் இடவில்லை. நான் சம்பந்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி திரித்து பேசப்படும்போது அமைதியாக இருக்க இயலாது அல்லவா?